Thursday 26 December 2013

வரைய முடியாத சித்திரம் - திலகவதி ஐ.பி.எஸ்.

அப்போது அவர்கள் என்னவாக இருந்தார்கள் என்பது நினைவில்லை. ஒரு பத்திரிகையில் படித்த அவர்களின் நீண்ட நேர்காணலே, அவர்களை நோக்கி என்னைத் தேட வைத்தது. பெண்களின் ஆழ்மன வலி, எப்போதாவது ஒருமுறை எல்லாவற்றையும் மீறி இப்படி வெளிப்படும். எழுத்தாளரும், தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியுமான திலகவதியே, இப்படியான என் தொடர் தேடுதலில் நான் கண்டடைந்த என் ஆத்மார்த்த ஸ்நேகிதி.

அந்நேர்காணல் வாசித்த எனக்கே வலி நிறைந்தது. வாழ்ந்தவருக்கு? அவள் விகடன் துவங்கிய புதிதில் ராசாத்தி அம்மாள் ‘என் சிரிப்பு சிங்கப்பூருக்கு போய்விட்டது’ என பத்து பக்கத்துக்கு ஒரு நேர்காணல் கொடுத்திருந்தார். அதில்தான் நான் அந்தம்மாவின் ஆத்மாவை, உள்மனதை, அதன் ரணத்தை உணர்ந்து கொண்டேன். நம், பொது புத்திகளிலிருந்து விலகி நின்று சிலரை உள்வாங்கும்போதுதான், அவர்களின் ஸ்நேகமும், சமூகம் அவர்கள் மேல் ஏற்றியிருக்கிற பிம்பம் கலைந்து, அவர்களை நம் சக மனுஷியாக, தோழியாக, நின்று நம்மில் ஒருவராக உணர முடியும்.

அதேபோல், எழுத்தாளர் திலகவதியுடனான என் முதல் தொலைபேசி உரையாடலில் நான் அடைந்த அனுபவம் அலாதியானது. அதிகாரம், பதவி இவைகளை மீறி, ’பூ, நதி, வனம், அனில்’ என மீறத் துடித்த ஒரு மனுஷியிடம் நான் நட்பானேன்.


முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நாங்கள் ஒரு மாவட்ட மாநாட்டையே, மாநில மாநாட்டுக்கும் மேலே போய் நடத்தினோம். சாரோன் போர்டிங் ஸ்கூல் மைதானத்தில் அன்று குவியாத படைப்பாளியோ, கலைஞனோ இல்லை. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி என ஆரம்பித்து, ஓவியர் சந்துரு, ட்ராட்ஸ்கி மருது, எடிட்டர் லெனின் என அந்த ஆளுமைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது.

அம்மைதானத்தில் ஆங்காங்கே கொத்துக்கொத்தாய் உட்கார்ந்து இலக்கியம் பேசிக்கொண்டிருந்த படைப்பாளிகளுக்கிடையே, ஒரு சைரன் வைத்த காரிலிருந்து இறங்கி, கம்பீரமும், பேரழகும் மிக்கவராக அவர் நடந்து வந்த காட்சி இலக்கியவாதிகளுக்கு பழகியிராது. அவர் எங்களோடு சகஜமாய் இருக்க முயன்றதும், நாங்கள் விலகிச் சென்றதுமாக அந்த டிசம்பர் ஞாயிறு மெல்ல என் நினைவில் துளிர்க்கிறது.
அப்பள்ளி மைதானத்து கல்மேடையில் உட்கார்ந்து நானும் அவரும் எங்கள் கதைகளை பகிர்ந்துகொண்டோம். ஏதோ ஒரு புள்ளி, இந்த துளிரும் நட்பை இன்னும் அடர்த்தியாக்கியது. எல்லா மேடைகளிலும், ‘‘பவா என் மூத்த மகன்’’ என்று சொல்லுமளவிற்கு எங்கள் குடும்பத்தில் ஒருவரானார் திலகவதி. தொடர்ந்து வாசிப்பையும், எழுத்தையும் ஒரு ஜீவனோடே தனக்குள் பழகி வைத்திருந்தார் திலகவதி. 24 மணி நேரம் கொண்ட ஒரு நாளில், 20 மணி நேரத்திற்கும் மேல் உழைத்துக் கொண்டேயிருந்த அசாத்தியமான மனுஷி திலகவதி.

முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியின்போது, போலீஸ்காரர்களின் மனநிலையில் ஒரு மாற்றம் ஏற்படுத்தவேண்டி ‘பாலின நிகர்நிலைப் பயிலரங்கம்’ என்ற ஆறு மாத பயிற்சி வகுப்பு ஒன்று திலகவதி மேடம் தலைமையில் தமிழகம் முழுவதும் நடந்தது. திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நானும் என் ஸ்நேகிதி லஷ்மி மேடமும் இயங்கினோம். அது, கருத்துக்களால் நிறைந்த ஒரு காலம்.

போலீஸ்காரர்கள் மனரீதியாக எவ்வளவு கீழானவர்களாக இருக்கிறார்கள் என்பதறிந்து அதிர்ந்தோம். பெண்களை படுப்பதற்கான இயந்திரங்கள் என்பதுக்கு மேல் அவர்களால் கருத முடியவில்லை. தாய்வழிச் சமூகத்திலிருந்து ஆரம்பித்து, வரலாறு நெடுக ஆண்கள் அவர்களை எப்படியெல்லாம் இம்சித்திருக்கிறார்கள் என்ற எங்கள் உணர்வுபூர்வமான உரைகள், அவர்களின் இறுகியிருந்த மனங்களை கொஞ்சம் ஈரப்படுத்தியிருக்கலாம். அதற்குமேல் எதுவும் நிகழவில்லை.
ஆனால், அந்த பயிலரங்குக்கு திலகவதி மேடம் எடுத்த ஆத்மார்த்த முயற்சிகள், உழைப்பு, பயணம் எல்லாம் எந்த பதிவுகளுமின்றி போனாலும், பல போலீஸ்காரர்களின் வாழ்வியல் அறத்தின் மீது எழுப்பிய கேள்விகள், என்றென்றும் நிற்கும். ரீட்டா மேரி என்ற பெண்ணை திண்டிவனத்தில் ஒரு வீட்டிலிருந்து மீட்டு, போலீஸ்காரர்களும், சிறைக்காவலர்களும் சீரழிந்த கொடுமை தமிழகத்தை வழக்கம்போல் ஓரிரு நாட்கள் உலுக்கிய செய்தியாக மட்டும் பார்க்கப்பட்டபோது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அதன் விசாரணை அதிகாரியாக திலகவதியை நியமித்தார். அதன் விசாரணைக்கென்று அவர்கள் செஞ்சிக்கு வந்திருந்தபோது, என்னையும் வரச்சொல்லி தொலைபேசியில் அழைத்தார். அவ்விசாரணயின் முழுமையிலும் நான் அவருடன் இருந்து கவனித்துக் கொண்டிருந்தபோது, எனக்குள் திலகவதி வேறு வேறு மனுஷியாக ஒரு படச்சுருளாக பதிவாகிக்கொண்டேயிருந்தார்.

கோபம், உக்கிரம், கவலை, கண்ணீர், ரௌத்ரம், சாந்தம் என பலவிதமான மன உணர்வுகளை அவர்கள் முகத்தின் வழியே நான் உணர்ந்தேன். வரிசை கட்டி நின்று எங்கள் மீது வீசிய, மீடியா ஒளியை மீறி என்னை அவர் காரின் பின் இருக்கைக்கு போய் உட்காரச் சொன்னார்.
கையில் கனத்த ரீட்டா மேரியின் விசாரணை பைலில் முகத்தை மூடிக்கொண்டு, காரில் ஏறி செஞ்சி சப்ஜெயிலுக்கு போகச் சொன்னார். அப்போது இருள் கவ்வியிருந்தது. இதே போலொரு மங்கிய இருளில்தான் அச்சகோதரி இச்சிறைச்சாலை காவலர்களால் சிதைக்கப்பட்டது என காலத்தை சாட்சிபடுத்தினார்.


அங்கு நிலவிய அசாத்திய மௌனம் எதன் பொருட்டாவது கலைய வேண்டுமென மனம் விரும்பியது. அங்கிருந்து திண்டிவனத்திற்கு ரீட்டாமேரிக்கு சிறை தண்டனை கொடுத்த பெண் நீதிபதியின் வீட்டிற்கு சென்றோம். வழிநெடுக, வரலாறு நெடுக பெண்களுக்கு நாம் இழைத்த கொடுமைகளை பட்டியலிட்டார். ‘இதில் நானும் ஒருத்தி’ என வெடித்தழுதார்.

‘‘ரீட்டாமேரி என் மக பவா. ஒரு சின்னக் குழந்தை எத்தனை பலமான மிருகங்களால் சிதைந்திருக்கிறது பாருங்க’’ என அந்தக் கார் பயணம் துயரத்தால் நிறைந்தது. நான் காரில் காத்திருந்தேன். அவர் நீதிபதியின் வீட்டிற்குள் சென்று பேசிக் கொண்டிருந்தார். ‘மேடம் இன்னிக்கு நைட் எங்க சாப்புடுவாங்க?’ என்ற அங்கலாய்ப்பில் ஒரு டி.எஸ்.பி. அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்.

‘செஞ்சி கெஸ்ட் ஹவுஸ்ல, திண்டிவனம் சாரம் கெஸ்ட் ஹவுஸ்ல.. அதிலில்லாம செங்கல்பட்ல’ என்று அவர் இரவு உணவு ஏற்பாட்டின் விஸ்தீரணத்தை, சூழலின் கணமறியாமல் என்னிடம் விளக்கிக் கொண்டிருந்தது சகிக்க முடியாததாய் இருந்தது. தங்கள் மேலதிகாரிகளை திருப்திப்படுத்த இவர்கள் எடுக்கும் அக்கறையில், நூறில் ஒரு பங்கையாவது ரீட்டாமேரி மாதிரியான சராசரி பெண்களை காப்பாற்ற எடுக்கத் தவறிவிடுகிறார்கள்.

இரவு 12 மணிக்கு விசாரணை முடிந்து, இறுகிய முகத்தோடு நீதிபதியின் வீட்டிலிருந்து வெளியே வந்தார். அவசரமாக காரில் ஏறி

‘‘ரவி, பவா வீட்டுக்கு போ’’ என உத்தரவிட்டார். ‘‘பவா, ஷைலுகிட்ட சொல்லி சாப்பிட ஏதாவது செய்யச் சொல்லு’’ என்றார்.
அன்று நாங்கள் பயணித்த வேகம், அதற்கு முன்னும் பின்னும் எப்போதும் இல்லாதது. அவ்வேகம் என்னை நிலைகுலைய வைத்தது.

‘‘மேடம், இத்தனை வேகம் அவசியமா?’’

‘‘இந்த வேகத்தில் விடுபட்ட ஒன்றிரண்டைச் சேர்த்து செய்யலாம் பவா.’’

இரவு ஒரு மணிக்கு வீட்டிற்கு வந்தோம். வீட்டில் நுழைந்து வழக்கமாக அவர்கள் உட்காரும் அந்த சின்ன ஹாலின் நடுவே தரையில் கால் நீட்டி உட்கார்ந்தார். கொஞ்சம் நிதானப்பட்டிருந்தார். அப்பெண்ணின் சிதைவை உணர்வுகளற்று ஒரு ரிப்போர்ட் மாதிரி சொன்னார்.

‘‘ரவி வண்டில பவாவுக்கும் ஷைலுவுக்கும் டிரெஸ் வச்சிருக்கேன். எடுத்துகிட்டு வா’’ என்றார்.

‘‘மேடம் இந்த சூழல்ல எங்களுக்கு எதுக்கு புதுத்துணி மேடம்?’’

‘‘நாளை காலைல பத்து மணிக்கு ரீட்டாமேரியைப் பார்க்க சென்னை ஜி.ஹெச்.சுக்கு போறேன். அந்தப் பொண்ணுக்கு ஆறு சுடிதார் வாங்கி கார்ல வச்சிருக்கேன். அப்படியே எம் புள்ளைகளுக்கும் வாங்கினேன்.’’

இந்தப் பேரன்பு, எப்போதும் எங்களை நிலைகுலைய வைக்கும். எனக்கு, ஷைலுவுக்கு, வம்சிக்கு, மானசிக்கு, எங்கள் வீட்டு சாந்திக்கு, தனித்தனியே என் நண்பர்களுக்கு என்று, அவர்கள் எப்போதும் அன்பைக் கொட்டின காலம், ஒரு படைப்புக்கு நிகரானது. நாங்கள் ‘வம்சி புக்ஸ்’ ஆரம்பித்தது, அதை ஒரு மேலான இடத்திற்கு கொண்டு போனது எல்லாவற்றிலும் அவர்களே முதன்மையானவர்.

ஒரு பத்திரிகையில் திலகவதியின் ஒரு பக்க கதை படித்து, நேரத்திற்காக காத்திருக்காமல் ஒரு நள்ளிரவில் அழைத்தேன்.

‘‘மேடம், குமுதத்துல உங்க கதை அருமை.’’

‘‘அப்பா, உங்கிட்ட ஒரு பாராட்டு வாங்க எனக்கு எட்டு வருஷம் ஆச்சி.’’

‘‘அதில்ல மேடம்’’ என வழுக்கினேன்.

அக்கதை தமிழின் பிரபலமான ஒரு நடிகருடையது. அவர் நலிந்த சில கலைஞர்களுக்கு உதவ நினைத்து, தன் வீட்டிற்கு அழைக்கிறார்.

நீண்ட நேரம் காத்திருந்து அவ்வயதான கலைஞர் உள்ளே போகிறார். அப்பிரபல நடிகர் ஓடிவந்து அவர் கைப்பற்றி,

‘‘சொல்லுங்க அய்யா. நான் உங்களுக்கு என்ன பண்ணனும்?’’
நிதானமாக அப் பெரியவர் சொல்கிறார்

‘‘எதுவும் பண்ணாத. கலைஞன்ல நல்ல கலைஞன், நலிந்த கலைஞன்னுல்லாம் யாருமில்லப்பா. எங்கிட்ட பணம் இல்லாம இருக்கலாம். உங்கிட்ட அது கொட்டி கிடக்கலாம். ஆனா, நான் என்னிக்குமே கலைஞன்தான். இனிமே எங்களை நலிஞ்ச கலைஞர்கள்னு சொல்லி அவமானப்படுத்தாதே.’’


இவ்வரிகள் என்னை சுழன்றடித்தது. மகாகவி பாரதியின் கம்பீரத்திலிருந்து ஆரம்பித்து, தமிழின் மகத்தான பல கலை ஆளுமைகளை என்னருகே கொண்டு வந்தது. சொல்ல முடியாத ஒரு உணர்வுத் தருணத்தில், நான் என் மரபுகளின் முன் சாஷ்டாங்கமாய் விழுந்து, அவர்களின் கால்களைப் பற்றி, இளம் தலைமுறையின் சார்பில் என் நன்றியை சமர்ப்பித்துக் கொண்டிருந்தேன். அவர்களின் கால்களும், என் கண்களும் ஈரத்தில் நிறைந்திருந்தது.

-நன்றி மீடியா வாய்ஸ்

எல்லா நாளும் கார்த்திகை - முன்னுரை

நாடோடியின் பாடல்

 “நான் மீடியாவாய்ஸ்ல எழுதிட்டிருந்த தொடர நிறுத்திட்டேன் அய்யனார்” “ஏன் பவா?”
“எழுதனுமேன்னு கமிட்மெண்டோட எழுத பிடிக்கல. மறுபடியும் எப்ப தோணுதோ அப்ப எழுதிக்கலாம்”

இதுதான் பவா. தன்னை ஒருபோதும் எழுத்தைச் செய்பவனாக மாற்றிக் கொள்ள விரும்பாத கலைஞன். எந்த ஒன்றிலும் ஆத்மார்த்தமாக மட்டுமே ஈடுபடவிரும்பும் எளிய மனம்தான் பவாவினுடையது . ஏன் அதிகம் எழுதுவதில்லை? என்கிற வழக்கமான நுண்ணுணர்வற்ற கேள்விக்கு பவாவின் பதில் மிகவும் சுவாரசியமானது

நான் ஏன் எழுதவேண்டும்? 

ஆனால் ஒன்றை மட்டும் எல்லோரும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். எழுதும் காலம்தான் எழுத்தாளருக்கு மிகவும் கொண்டாட்டமானது. அதிலும் எழுத்தைப் பிறருக்காகச் செய்யாமல் ஆழ்ந்த நேசத்தோடும் தனக்கே தனக்கான நெகிழ்வோடும் எழுதுபவர்களுக்கு எழுதும் காலத்தின் மகிழ்வை எளிதில் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. பவா இந்தத் தொடரை எழுத ஆரம்பித்த நாளிலிருந்து முடிக்கும்வரை எழுத்தின் வசீகரப் பிடிக்குத் தன்னைத் தந்திருந்தார். இதை நேரில் பார்த்தும், கட்டுரைகளின் சில பகுதிகளைப் படிக்கும்போதும் உணர்ந்து கொண்டேன். இது கலைஞர்களுக்கே உரித்தான சந்தோஷம். காலையில் எழுந்து கழிவறை செல்வதுபோல எழுத்தைப் பாவிப்பவர்களுக்கு, எழுத்துப் போலிகளுக்கு, எழுத்தைப் பண்டமாய் மாற்றுபவர்களுக்கு வாழ்வில் ஒருபோதும் கிட்டிடாத உண்மையின் தரிசனம். பவா அந்த தரிசனத்தின் உச்சத்திற்கு தன்னைத் தந்துவிட்டிருந்தார்.

பவாவின் எழுத்தை விமர்சகச் சட்டத்திற்குள் வைத்துக் கூறுபோட்டு இது இந்தவகை என நிறுவுவதில் எனக்கு விருப்பமில்லை. தேசங்களற்ற நாடோடியின் பாடல் எந்த ராகத்தில் இருந்தால்தான் என்ன? என்ன மொழியில் இருந்தால்தான் என்ன? அந்தக் குரலின் வசீகரம் அல்லவா நம்மை அடித்துப் போடுகிறது! அந்தக் குரலின் எளிமையல்லவா நம்மை அசைத்துப் பார்க்கிறது! அடிவயிற்றிலிருந்து பீறிட்டெழும் அந்த சாரீரமல்லவா நம்மை கரைய வைக்கிறது! பவா வின் எழுத்து அத்தகையதுதான். பவாவின் எழுத்தை நாடோடியின் பாடலுக்கு நிகராகத்தான் பார்க்கிறேன்.

இந்தத் தொகுப்பில் தமிழின் பல பிரபலங்கள் குறித்த பகிர்வு இருக்கிறது. சமூகத்தால் அடையாளங் காணப்பபட்ட பிரபல கலைஞர்களிலிருந்து பிரபலமல்லாத கலைஞர்கள் வரைக்குமாய் ஏராளமான மனிதர்களைப் பற்றிய முழுமையான பார்வை இருக்கிறது ஆனால் அவர்களை வெற்றி தோல்வி எனப் பிரித்துப் பார்க்காமல், இருமையில் நிறுத்தாமல் கலைஞர்களாய் மட்டுமே அடையாளங் கண்டு பதிவு செய்திருப்பதுதான் இத்தொகுப்பின் மிகச் சிறந்த அம்சம். பவா மனிதர்களை அப்படித்தான் பார்க்கிறார். ஒரு சாமான்யனின் மனம் பவாவின் எழுத்து முழுவதும் தொடர்ந்து இயங்கியபடியே இருக்கிறது.

பவாவின் எழுத்து வாசிப்பவர்களை தடுமாற வைக்கிறது. சதா மூளையின் கட்டுப்பாட்டிலிருக்கும் மனதை சற்றே இடம்பெயர வைக்கிறது. எழுத்தின் வழியே பவா காட்சிப்படுத்தும் உலகில் தன்னை மொத்தமாய் தொலைப்பதும் எல்லா மனங்களுக்கும் நிகழ்வதுதான். இலக்கியம், திரைப்படம், ஓவியம், புகைப்படம் என எல்லாத் துறைகளிலும் மிளிர்ந்த/மிளிரும் கலைஞர்களுடனான தன் அனுபவத்தை சாதாரணனின் பார்வையில் பதிவு செய்திருக்கிறார். எல்லோராலும் அறியப்பட்டவர்களின் இன்னுமொரு அறியாதப் பக்கம் பவாவின் எழுத்து வழியே , வாழ்வு வழியே பதிவாகியிருக்கிறது.

  “எந்த மனித மனமும் தட்டையானதல்ல. அது முரண்பாடுகளால் ஆனது. எந்த மனிதனையும் முழுக்கப் புரிந்து கொண்ட சகமனிதனோ, உறவுகளோ நிச்சயம் இல்லை”

இப்படி ஒரு எழுத்தை எதிரிகளற்ற, துவேஷங்களற்ற, போட்டிகளற்ற, பவா மட்டும்தான் எழுத முடியும் மேலும் அவர் கண் வழியாய் நாம் காணும் சித்திரங்கள் அபூர்வமானவை. பிரபஞ்சன் குறித்த கட்டுரையில் பவா எழுதியிருந்த வரிகள் என்னைத் தூங்கவிடாமல் அலைக்கழித்தன.

  “இப்பூமி பரப்பெங்கும் உண்மையான கலைஞர்களின் குரல்கள், லெளகீக வாழ்வின் முன் இப்படித்தான் உள்ளடங்கிபோய்விடுகிறது. மூன்றாந்தர மனிதர்களின் வெற்றி பெருமிதத்திற்கு முன் ஒரு படைப்பாளி ஒடுங்கிப் போவது இந்த புள்ளியில்தான்” “ஒரே மனிதன் ஒட்டுமொத்த மானுட பசிக்கான துயரத்தைப் பாடிக்கொண்டே தன் சொந்த பசிக்காகவும் ரொட்டிகளை தேடவேண்டியிருந்தது”

எழுத்தை மட்டுமே தொழிலாகக் கொண்டு ‘பிழைக்க’ வழி தெரியாத ஒட்டுமொத்த எழுத்தாளர்களுக்கான ஆறுதலாகவும் இவ்வரிகள் இருந்தன. படைப்பாளிகளுக்கு தர வேண்டிய முக்கியத்துவத்தை படைப்பாளிகளுக்கு இருக்க வேண்டிய கர்வத்தை ஜெயகாந்தனின் கட்டுரை வழியாய் ஒரு சம்பவத்தின் மூலமாய் பவா நினைவு கூர்கிறார்.

  “இன்னொரு நாற்காலி ஜெ.கே.வின் நெருங்கிய நண்பரும், அப்போதைய பாண்டிச்சேரி சபாநாயகருமான கண்ணனுக்கு. மேடையில் நின்று ஒரு நாற்காலியை எடுக்கச் சொல்கிறார். கண்ணனைப்பார்த்து, பார்வையாளர்கள் மத்தியில் இருந்த ஒரு இருக்கையைக் காட்டுகிறார். கண்ணன் எவ்வித தயக்கமும் இன்றி அதை நோக்கி போகிறார்"

இந்த வரிகளைப் படிக்கும்போது மேலிட்ட கர்வம் ஒரு படைப்பாளிக்கே உரியது. சமீபத்தில் இறந்து போன தன்னுடைய நண்பன் ராஜவேலின் மரணத்தை பவாவின் வார்த்தைகளில் காட்சியாய் காணும்போது துக்கம் மேலிட்டது. தன்னுடைய நண்பன் இறந்து போன துக்கத்தை தாங்க முடியாது வார்த்தைகளில் கொட்டித் தீர்ப்பது என்பது வேறு. ஆனால் பவா தன் நண்பனின் மரணத்தில் அவன் தந்தையின் துக்கத்தைப் பார்த்து பரிதவிக்கிறார். மகனை சாகக் கொடுத்து வாழநேரிடும் தகப்பன்களின் ஒட்டு மொத்த துக்கத்தை வார்த்தைகளாய் கடத்துகிறார்.

  “ஒரு புது வேட்டி போர்த்தி, கால் விரல்களைச் சேர்த்துக் கட்டி, பன்னீர் தெளித்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி, இவை அனைத்தையும் தனியாய் அசாத்திய மவுனத்தோடு செய்தவர் ராஜவேலுவின் அப்பா. எங்கள் நாலைந்து பேரின் மூச்சுக் காற்றை உட்கொண்டு அவ்வறை சுவாசித்துக்கொண்டிருந்தது. நான் வயதான அந்தத் தகப்பனையே பார்த்துக்கொண்டிருந்தேன். எதன் பொருட்டோ அவரிடம் உறைந்த அந்நேர மவுனம், என்னை பயமுறுத்தியது. எல்லாம் முடிந்து, தன் மகனின் காலடியில் நின்று, படுத்துறங்கும் மகனை ஆசைதீர பார்வையால், முழுமையாய் பருகினார். ‘‘மகனே’’ என ஓங்காரித்து வந்த அக்குரலொலி, அங்கிருந்த எங்கள் எல்லோரையும் அசைத்தது. அதன் பிறகான பத்துப் பதினைந்து நிமிடமும் அவர் தன் மொழியற்ற குரலால், வெவ்வேறு உடல் மொழியால், தன் பிரிவாற்றிய அந்நிமிடம் என் வாழ்வில் வேறெப்போதும் காணக்கூடாதது. பிள்ளைகளை பறிகொடுத்துவிட்டு சவங்களாக அப்பாக்கள் வாழும் வாழ்வெதற்கு?”

இந்த வார்த்தைகளின் இந்த வார்த்தைகள் உருவாக்கிய காட்சியின் தாக்கத்தை ஒரு இளந்தகப்பனாய் என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஒட்டுமொத்த மனித மனதின் நேர்மையான சாட்சியம்தான் பவாவின் எழுத்து. கந்தர்வனின் நினைவாக எழுதப்பட்ட கட்டுரை பாரதி படத்தின் துவக்கக் காட்சியை நினைவூட்டியது. ஞானராஜசேகரனின் பாரதி திரைப்படம் எனக்குப் பிடித்த படங்களுள் ஒன்று. அத்திரைப்படமும் பாரதியின் மரணத்திலிருந்துதான் துவங்கும். பவாவின் கந்தர்வன் கட்டுரையும் அவரது மரணத்திலிருந்துதான் துவங்குகிறது. கந்தர்வனின் படைப்புலகை இப்படி எழுதுகிறார்

  “மனிதனின் மென் உணர்வுகளைத் தன் படைப்புப் பக்கங்களெங்கும் படிய வைத்துக் கொண்டேயிருந்தவர் கந்தர்வன். கவர்மெண்ட் ஆபீஸ்களின் பழுப்பேறிய கோப்புகளுக்கிடையே கிடந்த இந்த மகத்தான மனிதர்களை அள்ளிக் கொண்டுவந்து நம் முன் நிறுத்தினார் கந்தர்வன்” 

கந்தர்வன் என்கிற படைப்பாளியின் ஒட்டு மொத்த எழுத்து சாராம்சத்தை இப்படி இரண்டே வரிகளில் அதன் உன்னதம் குறையாது பதிவு செய்வதை முக்கியமானதாகப் பார்க்கிறேன். பவா வால் இது சாத்தியப்பட்டிருக்கிறது. 

ஒரு படைப்பாளியைக் குறித்து பதிவு செய்வதென்பது மிகவும் சவாலான விஷயம். பதிவு செய்பவரின் கண்களைப் போலவே அப்படைப்பாளியை பிறர் அனுகுவது கிடையாது. படைப்பும் படைப்பாளியும் நேர்கோட்டில் பயணிப்பவை அல்ல. ஆனால் எல்லாப் படைப்பாளிக்கும் எல்லா படைப்பிற்கும் ஆன்மா என்ற ஒன்று இருப்பதாக நம்புகிறேன். ஒரு படைப்பாளியைக் குறித்த பதிவு என்பது அந்த ஆன்மாவை நெருங்கினால் கூட எனக்குப் போதுமானது. இம்மாதிரியான ஒரு மனநிலையில் பவாவின் தொகுப்பை வாசித்தவுடன் முழுமையாக நிறைவடைந்தேன். எல்லாப் படைப்பாளிகளின் ஆன்மாவையும் பவா மிக இலகுவாகத் தொட்டிருக்கிறார். அவர்களை அப்படியே எழுத்தாக மாற்றியிருக்கிறார். இக்கட்டுரைத் தொகுப்பை வரலாற்று ஆவணமாகக் கூட மதிப்பிட முடியும். மேலும் இத்தொகுப்பில் பதிவாகியிருக்கும் மனிதர்கள் கலவையானவர்கள். தமிழ் சினிமாவை மாற்றியமைத்த பாலுமகேந்திரா பாரதிராஜா க்களிலிருந்து நவீனத் திரை மொழியின் உச்சங்கள் தொடும் மிஷ்கின் வரைக்குமாய். சிறுபத்திரிக்கை கவிஞன் கைலாஷ் சிவனி லிருந்து எழுத்துப் பேராளுமை ஜெயகாந்தன் வரைக்குமாய் சமூகம் நிர்மாணித்திருக்கும் ‘தகுதி’ ‘அடையாளங்கள்’ குறித்த கவலை ஏதுமற்று படைப்பையும் படைப்பாளியின் கலை மனதையும் மட்டுமே முன்நிறுத்தி எழுதப்பட்டிருக்கிறது. இடையே சாமான்ய மனிதர்களின் அசாதரணமான வாழ்வையும் தரிசிக்க முடியும்.

இம்மாதிரியான ஒரு கலவையை பவா வால் மட்டும்தான் உருவாக்க முடியும். ஒரு நீர்வண்ண ஓவியம் பல்வேறு வண்ணங்களைக் கொண்டு குழைத்துக் குழைத்து உருவாவது போல இத்தொகுப்பு உருவாகி இருக்கிறது. 

“ப்ரியமுள்ள பவா, உங்கள் கட்டுரைகளை மீண்டும் ஒருசேர வாசித்திருப்பதால் வாய்த்திருக்கும் இந்நெகிழ்வான மனநிலையில், பாலுமகேந்திரா உங்களிடம் சொன்னது நினைவிற்கு வருகிறது. அதையொட்டி யோசித்துப் பார்த்தால் உண்மையான கலைஞர்கள் அனைவருமே புலிகள்தாம். புலி இறந்த பின்னாலும் அதன் கோடுகள் அழிவதில்லை. போலவே உண்மையான படைப்பாளிக்குப் பிறகும் அவன் படைப்புகள் நிற்கும். நான் உங்களை அப்படித்தான் பார்க்கிறேன் பவா”


என்றென்றைக்குமான ப்ரியங்களுடன்

அய்யனார்விஸ்வநாத்

நன்றி - http://ayyanaarv.blogspot.in/

தவறவிடாமையின் பெருமிதம் - வைட் ஆங்கிள் ரவிஷங்கர்

சுபமங்களாகாலம் என்றொன்றிருந்தது. ஒவ்வொரு மாதமும் அது வாசிப்பு மனங்களில் ஜால வித்தைகள் செய்தது. விஷய கணத்தில், வடிவமைப்பில், புகைப்படத்திலென அது, அதற்கு முந்தைய எல்லா சாதனைகளையும் சுலபமாக துடைத்தெறிந்தது.
அதில், கலைஞர் கருணாநிதியின் ஒரு விரிவான நேர்காணல் வெளிவந்திருந்தது. அதற்கு பிரசுரிக்கப்பட்டிருந்த புகைப்படங்கள், அந்நேர்காணலை இரண்டாம் இடத்திற்கு தள்ளியிருந்தது. அவரை கட்டம்போட்ட லுங்கி, முண்டா பனியனுடனும், சப்பராங்கால் போட்டு தரையில் உட்கார்ந்து எழுதும்படியான புகைப்படங்களோடும், அதுவரையிலான அவரின் ஒயிட் அண்ட் ஒயிட் பிம்பத்தை சிதைத்து, ‘நம்ம வீட்டு மனுஷன்தான்என்பது மாதிரியான ஒரு மன நெருக்கத்தைத் தந்திருந்தது.
நான் அப்புகைப்படங்களை எடுத்த கலைஞனைத் தேட ஆரம்பித்து, சுலபத்திலேயே கண்டடைந்தேன். வைட் ஆங்கிள்ரவிஷங்கர்என்ற அந்த வளர்ந்த குழந்தை, இன்றளவும் என் ஆத்மார்த்த நண்பர்களில் ஒருவன்.
‘‘எப்படி ரவி இதை சாத்தியமாக்கினீங்க?’’
‘‘நான் புகைப்படம் எடுப்பதற்காக அவர் வீட்டிற்குப் போனப்பவே அவர் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டைப் போட்டு தயாராயிருந்தார். கொஞ்சம் பயமிருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு காமிராவை கையிலெடுக்காமல் மௌனம் காத்தேன்.
என்னய்யா எடுக்கலையா?’ என அவரின் கனத்த குரலில் கேட்டபோது, இது எனக்கு வேணாங்க. இதுவரையிலும் யாரும் உங்களை எடுக்காதது மாதிரியான படங்கள்தான் வேணும்’’
‘‘யாரும் எடுக்காததுன்னா?’’
‘‘ரொம்ப இயல்பா, வீட்ல நீங்க எப்படி இருப்பீங்களோ அப்படி, லுங்கி கட்டி, பனியன் போட்டு, தரையில உட்கார்ந்து’’
நான் அடுக்கிக்கொண்டே போனேன்.
அவர் சிரித்துவிட்டார். அச்சிரிப்பின் விநாடிகளை நான் எனதாக்கிக் கொண்டு அவருள் பிரவேசித்தேன். அதன்பின் எல்லாம் சாத்தியமானது. புகைப்படங்கள் கம்ப்யூட்டரில் பதுங்காத காலமது. பிலிம் ரோலில் படமெடுத்து, கெமிக்கலில் கரைத்து, நெகட்டிவ் கழுவி, வெள்ளைத் தாளில் உருவம் பதிவாகும் அந்த கணநேரத்து கலைஞனின் பெருமிதத்தை, அந்த இருட்டறை மட்டுமே தரிசித்த தருணங்களை நாம் இழந்துவிட்டோம். இப்போது அடுக்கடுக்காய் கணினியின் மௌஸ் நகர்தலுக்கு புகைப்பட காட்சியை உட்படுத்தி... சுவாரஸ்யமற்ற நிகழ்வுகளுடன் சுவாரஸ்யமற்ற வாழ்வு.
ரவிஷங்கரின் கேமிரா, இசைக் கலைஞர்களாலும் எழுத்தாளர்களாலும் நிரம்பியிருந்தது. தமிழ் எழுத்தாளர்கள் யாரும் அதற்கு முன் தங்களை இப்படி ஒரு அழகோடு பார்த்ததில்லை. கல்மண்டபங்களின் பின்னணியில் வண்ணதாசனும், தாமிரபரணிக் கரை ஈரத்தில் வண்ணநிலவனும் என்று பார்ப்பவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தின நாட்கள் அது. ஒரு முழுநேர இசைக் கச்சேரியின்போது, பாடுபவருக்கும் வாசிப்பவருக்கும் ஏற்படும் அத்தனை முகபாவங்களையும் பரவசத்தையும், நானறிந்து ரவிஷங்கரைத் தவிர்த்து வேறு எவரும் இந்தளவு நுட்பமாய் பதிவு செய்ததில்லை.
காத்திருத்தல்தான் இதன் ரகசியம். தவறவிடாமை இதன் வெற்றி. வண்ணதாசன், ‘போய்க்கொண்டிருப்பவள்என்றொரு கதை எழுதி இருப்பார். அதில்விருத்தாஎன்றொரு புகைப்பட கலைஞன். தாலி கட்டும் அந்த அற்புத கணத்தை, எதன் பொருட்டோ தவறவிட்டுவிடுவான். தலையில் கைவைத்து துளிர்க்கும் கண்ணீரை இரகசியமாய் துடைத்து, இழத்தலின் துயரம் தாங்காமல் அம்மண்டபத்தில் யாரும் பொருட்படுத்தாத ஒரு இருட்டு மூலையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருப்பான். அவன் தோளில் விழும் கை ஸ்பரிசம் உணர்ந்து திரும்புவான்.
‘‘என்னாச்சு?’’
‘‘தாலி கட்றப்போ, எல்லாரும் சூழ்ந்துட்டாங்க சார், படம் எடுக்க முடியல.’’
‘‘சரி விடு. அதுக்காக இவ்வளவு கலங்குனா?’’
‘‘என்ன சார் சொல்றீங்க? அந்த கணத்தை, இதயத்தின் அடியாழத்திலிருந்தும் பொங்கும் அப்பரவச கணத்தை வேறெப்போ சார் எடுக்க முடியும்?’’
இக்கதை வாசிப்பின் போதெல்லாம்ரவிதான், விருத்தாஎன ரவியை உருவகப்படுத்திக் கொள்வேன்.
தன் மூன்று மணிநேர கச்சேரி வாசிப்பில், தோ ஒரு சங்கீத சுழிப்பின் உச்சத்தில், கடம் வாசிக்கும் கலைஞர் விநாயக்ராம், தன் கடத்தை மேலே தூக்கிப்போட்டுப் பிடிக்கும் அச்சில நொடிகளை ரவி தன் கேமராவால் ஆறேழு படங்கள் எடுத்து அசத்தியிருப்பான். மண்பானை கீழே விழுந்து புறப்படுவதற்குள் அவன் அள்ளியெடுத்த அற்புத கணங்கள் அவை. ஒரு மேம்பட்ட கலையை தன் உயிராக நேசிக்கும் ஒருவனுக்கு மட்டுமேயான சாத்தியங்கள் இவை.

தன் எழுத்தாளர் புகைப்பட வரிசையில் வி வறவிட்ட ஆளுமைஅம்பை’. அவரை படமெடுக்க, மும்பைவரை சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய கசப்பு, அந்த ஆற்றாமை, ஒரு தீர்க்க முடியாத இரகசிய வியாதிபோல் அவரிடம் தங்கியிருந்தது. ‘அம்பைதிருவண்ணாமலைக்கு வந்தபோது அவரிடம் என் சிநேகிதி திலகவதியும், தன் நெடுநாளைய கனவின் மெய்ப்படுதல் நிமித்தம் ரவியும் உடன் வந்திருந்தார்கள். எல்லோர் பயணங்களுமே உள் இரகசியங்களால் நிறைந்தது. மிக அருகில் இருப்பவர்களாலும் அறிந்துகொள்ள முடியாத பிரபஞ்ச ரகசியங்கள் அடங்கியது மனித மனம். அது மௌனமாய் இருப்பது மாதிரிபொய் தோற்றமளிக்கும், கொந்தளிக்கும் எரிமலைகளை உள்ளடக்கியது. என்ன சொல்லியும், ‘அம்பைஅப்புகைப்பட பதிவிற்கு சம்மதிக்கவில்லை.
‘‘மேடம், நான் உன்னதமான எழுத்தாளர்களையும், இசைக்கலைஞர்களையும் மட்டுமே எடுத்திருக்கிறேன்.’’
‘‘என்னை எடுக்காத, நான் உன்னதமானவள் இல்லை.’’
மூன்று மணிநேர பயணம் முழுக்க அடைந்த தோல்வியும், சக மனப் புரிதலற்றச் சூழலும் ரவியை விரக்தியின் உச்சத்திற்கு கொண்டுபோயிருந்தது.
வீட்டில் சாப்பிடும்போது ரவி என் கைப்பிடித்தழுத்தி,
‘‘பவா, நீங்க ஒருமுறை சொல்லுங்க’’
நானும், சிநேகிதி திலகவதியும் சொன்னது, ஒரு முன்முடிவான கருத்தால் உறைந்திருந்த மனதை, கரைக்க முடியவில்லை.
‘‘.கே. மேடம், நான் எடுக்கல. ‘அம்பைன்னு ஒரு ரைட்டர் இல்லாமலேயே என் ஆல்பம் நிறைவடையும்.’’
அன்று மாலை நடந்த முற்றத்திற்கு, ரவி தன் கேமராவை அறையிலேயே வைத்துவிட்டு வெறும் ஆளாக அம்மைதானத்துக்கு வந்திருந்தான். ஒரு மந்தகாச வெற்றி புன்னகையோடு அம்பை அவனைப் பார்த்து,
‘‘மீட்டிங்ல வச்சி எதுவும் இரகசியமா எடுத்துறாதப்பா’’ என்றார்.
ரவி மௌனமாக, ஆனால் உறுதியாக சொன்னது ன்னும் என் நினைவில் ததும்புகிறது.
‘‘மேடம், இது பப்ளிக் மேடை. இதுல உங்களை படமெடுக்க நான் உங்க அனுமதியை வாங்கணும்னுகூட அவசியமில்லை. உங்களை கேக்காமலேயே நூற்றுக்கணக்கான படம் எடுத்திருக்க முடியும். ஆனா எனக்கு வேணாம். எதன்பொருட்டோ நீங்க நிராகரிக்கிற ஒரு விஷயத்தை நான் ஏன் பலவந்தப்படுத்தணும்? ஒண்ணே ஒண்ணு சொல்றேன் மேடம். நீங்க எழுத்தாளர்னா, நான் கலைஞன். இதுல நீங்க மே இருக்கீங். நான் உங்களை படம் எடுத்து பொழப்பு நடத்துற தேர்ட் ரேட்டட் வியாபாரியில்லை. அதனாலதான் என் கேமராவை ரூம்ல வச்சிட்டு வந்தேன். இனி நீங்க சுதந்திரமா பேசுங்க.’’
கோபமும், ஆத்திரமும், கலைஞனுக்கான கம்பீரமும் சேர்ந்து ஒலித்த அக்குரல், டேனிஷ் மிஷன் மேநிலைப்பள்ளி மைதானத்தில் அதுவரை ஒலிக்காதது.
ஒரு வனப் பயணத்தில் ரவி எங்களோடிருந்தார். மனித மனம் இதுவரை இழந்துபோன ஸ்ருதிகளை மீட்டும் கணமாக அப்பயணம் மௌனத்திலும் இசையிலும் நிரம்பியிருந்தது. எங்கள் வழியை மறித்து, ஒரு பேயென வியாபித்திருந்த ஒரு ஆலமரம் எங்களை நிறுத்தியது. அதன் விழுதுகளும், அதன் பருண்மையும், அதன் நிழலும், ‘என்னை மீறி எங்கடா போறீங்க?’ என மிரட்டியது. அதற்கு அடிபணிந்து அதன் அடியில் வட்டமாக ஒடுங்கினோம். ஒவ்வொருவரும் தாங்கள் வாழ்வில் இந்த இடத்தை அடையக் கொடுத்த விலை, அவமானம், உடலிலும், மனதிலும் மிகுந்திருந்த தழும்புகள், இவைகளைத் தடவிப் பார்த்துக் கொண்டோம்.
ரவிதான் முதலில் தன் வாழ்வைப் பகிர்ந்து கொண்டான்.
‘‘சுபா சுந்தரத்தின் அசிஸ்டெண்ட் நான். எங்க ஸ்டூடியோவுக்கு எப்போதும் இலங்கையிலிருந்து பலர் வந்து சாரோட பேசிக்கிட்டிருப்பாங்க.
மனதைக் கரைக்கும் அவ்வாழ்வியல் சிதைவு அனுபவங்களை ஈவிரக்கமின்றி துடைத்து, அடுத்த நிமிஷத்திற்கு தாவுவேன். சாதனை என்பது மட்டுமே மனம் முழுக்க நிரம்பியிருந்த நாட்கள் அவை. ராஜீவ் கொலை நடந்த அன்று காலை, என்னோடு சக புகைப்பட உதவியாளனாய் இருந்த ஹரிபாபு வீட்டிற்கு வந்து, ‘உன் கேமரா கிட் வேணும் ரவி. ராஜீவ் நிகழ்ச்சியை கவர் பண்ணனும்.’ என்றான்.
அதை எடுத்துக்கொள்ள சொல்லிவிட்டு என் அன்றாடங்களில் மூழ்கினேன். அடுத்தநாள் காலை தமிழ்நாட்டுக்கே ரத்தக்களரியாக விடிந்தது. என் வீட்டில் வந்து விழுந்த தினசரியிலும் அந்த இரத்த கவிச்சியை உணர முடிந்தது. நான் ரொம்ப இயல்பாக குளித்து முடித்து, மாலை முரசு அலுவலகத்திற்குப் போய், அதன் எடிட்டரோடு பேசிக் கொண்டிருந்துவிட்டு, கீழே இறங்கிடீகுடிக்க வந்தேன். அப்போது எடிட்டருக்கு வந்த தொலைபேசி அழைப்பு, ராஜீவ் கொலையில் இறந்தவர்களின் பெயரை பட்டியலிட்டது. அதில் ஆறாவது பெயர்வைட் ஆங்கிள் ரவிஷங்கர்’.
‘‘வெயிட் வெயிட். ரவி சாகலை, அவன் அங்க போகவேயில்லை. இப்பதான் எங்கூட பேசிட்டு கீழே, ‘டீகுடிக்க போயிருக்கான்.
‘‘இது அஃபீஷியல் பிரஸ் நியூஸ்.’’
‘‘இல்லப்பா. ஏதோ தப்பு நடந்திருக்கு.’’
ரவி, இப்போது நிகழ்காலத்திற்கு வந்திருந்தான்.
‘‘அந்த தொலைபேசி செய்தி என் வாழ்வை நாசப்படுத்தியது பவா. என் ஆன்மா, உடல் ஆகியவற்றின் சிதைவை ஐந்து வருடமாய் என்னையே பார்க்க வைத்தது. என்னிடமிருந்த எல்லா நுட்பங்களையும்மல்லிகைஇல்லம் ஈவிரக்கமின்றி உறிஞ்சியெடுத்தது. ‘ஒருவேளை ஹரிபாபுவுக்கு ராஜீவை கொல்லப்போகிற விஷயம் தெரிந்திருக்குமோ?’ என இப்போது யூகிக்கிறேன். அவன், ‘ரவி, நீயெல்லாம் என்ன பெருசா போட்டோ எடுக்குற? நான் எடுக்கப்போற ஒரே ஒரு போட்டோ உலகம் முழுக்க பேசப்படும் பாருஎன அடிக்கடி சொல்லக்கேட்ட வார்த்தைகளுக்கான அர்த்தம் என்னவென்பதை, ராஜீவ் கொலைக்குப் பிறகே உணர முடிந்தது.
குண்டுவெடித்தபோது, ஹரிபாபு சுமார் 20 அடிக்கும் மேலே தூக்கியெறியப்பட்டிருக்கிறான். உயிரற்ற அவன் உடல்மேல், தூக்கியெறியப்பட்ட அந்தக் கேமராவும் வந்து விழுந்திருக்கிறது. ரொம்ப நேரமாய், ஒரு சந்தேகத்தோடே அவனைக் வனித்துக் கொண்டிருந்த ஒரு இன்ஸ்பெக்டர், அக்கேமராவை எடுத்துக் கொண்டுபோய் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு ஸ்டூடியோவைத் திறக்கச் சொல்லி, அதைக் கழுவி பிரிண்ட் போடச் சொல்கிறார்.
டார்க் அறையிலிருந்து கதவை வேகமாகத் திறந்த அந்த ஸ்டூடியோ தொழிலாளி,
‘‘சார் இது கலரா, ஒயிட் அண்ட் பிளாக்கா?’’
‘‘தெரியலப்பா, இப்ப எவன் ஒயிட் அண்ட் பிளாக்ல எடுக்கறான், கலர்தான்.’’
கேமராவைத் திறக்காமல் அப்படியே அந்த இன்ஸ்பெக்டரிடம் தந்து,
‘‘கலர்னா மெட்ராஸ்தான்’’
அதிலிருந்த புகைப்படங்களே, ராஜீவ் கொலையின் பல மர்மங்களை உலகிற்கு அவிழ்த்தது. கொலைக் களத்தில் சிதறியிருந்த பொருட்களில் ஹரிபாபு இரவல் வாங்கிப் போயிருந்த வைட் ஆங்கிள் ரவிஷங்கரின் கேமரா பேக்கும் ஒன்று. இப்படித்தான் இறந்து போனவர்களின் பட்டியலில் ரவி இடம்பெற்று, பிறகு பிழைத்து வந்தது.
இதோ இந்த டிசம்பர் சீசன் துவங்கிவிட்டது. ஏதாவதொரு இருட்டு மூலையில், தன் செல்ல கேமராவோடு, இதுவரை தவறவிட்ட ஏதோ ஒரு அற்புத கணத்தின் அசாத்தியத்தை அப்படியே தன் கேமராவில் அள்ளிக்குடிக்க காத்திருக்கும் தாகமடங்காத அக்கலைஞனை நீங்கள் காணக்கூடும். மௌனமாக ஒரு கைக்குலுக்கலோடு விடைபெற்றுக் கொள்ளுங்கள். நாத உச்சத்தை, சுதா ரகுநாதனோடு சேர்ந்து ரவியும் தொட முயலும் இத்தருணம், எதனாலும் கலைந்துவிடக்கூடாது.